search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டம்"

    இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக மரத்தா சமூக அமைப்பு அறிவித்துள்ளது. #MarathaReservationProtest #MarathaKrantiMorcha #MarathaQuotaStir
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் 30% மக்கள்தொகை கொண்ட மராத்தா சமூகத்தினர், அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 16% இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி,  போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பிரமாண்ட அமைதி பேரணிகளை நடத்தி நாட்டின் கவனத்தை ஈர்த்தனர். இதில் பலன் கிடைக்காததால் அவர்களது போராட்டம் வன்முறை களமாக மாறியது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் (புதன்கிழமை) சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மராத்தா சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.



    மும்பையிலுள்ள ஆசாத் மைதானத்தில், இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள மராத்தா சமூகத்தினரை விடுவிக்கக் கோரியும், தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் மராத்தா கிரந்தி மோர்ச்சா அமைப்பு அறிவித்துள்ளது.

    இனி முழு அடைப்பு போராட்டம் மற்றும் வன்முறை போராட்டங்கள் நடக்காது என இந்த அமைப்பு கூறியிருந்த நிலையில், தற்போது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கைதாக முடிவு செய்துள்ளது. இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், வரும் ஆகஸ்டு 9-ஆம் தேதி மும்பையில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தப் போவதாகவும் மராத்தா சமூகத்தினர் எச்சரித்துள்ளனர். #MarathaReservationProtest #MarathaKrantiMorcha #MarathaQuotaStir

    மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வன்முறை பரவியதையடுத்து, மராத்தா சமூக அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டது. #MarathaProtest
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் நீடித்தது.

    ஆனால், போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் இன்று வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் சில வழித்தடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கற்களை வீசி தாக்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.


    இவ்வாறு வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் இன்று பிற்பகல் அறிவித்தனர். மேலும் தங்கள் போராட்டம் வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    நாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்கவே விரும்பினோம். ஆனால் ஒருபோதும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவதை விரும்பமாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.

    தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும், இதற்கு அரசியல் சதிதான் காரணம் என்றும் மராத்தா கிரந்தி மோர்ச்சா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வீரேந்தர் பவார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எந்த வன்முறையும் இன்றி 58 அமைதி பேரணிகளை நடத்தியிருப்பதாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.  #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
    மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டு போராட்டத்தின்போது இன்று 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #MarathaProtest #MarathaReservation
    அவுரங்காபாத்:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் போராட்டத்தை நிறுத்தி வைத்திருந்தனர். அதன்பின்னர் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது.

    அவுரங்காபாத் மாவட்டம் கோதாவரி ஆற்றின் அருகே நேற்று ஜலசமாதி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் பங்கேற்ற நபர் திடீரென பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்து இறந்துபோனார்.

    இந்நிலையில் இன்று அவுரங்காபாத்தில் நடந்த போராட்டத்தின்போது 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 2 பேர் ஆற்றில் குதித்தனர். ஒருவர் விஷம் குடித்தார். மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    இதேபோல் அவுரங்காபாத்தின் கங்காபூரில் மராத்தா கிரந்தி மோர்ச்சா தொண்டர்கள் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது. ஒரு சில இடங்களில் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கங்காபூரில் லாரியை கவிழ்த்து தீ வைத்தனர். இந்த வன்முறைப் போராட்டம் காரணமாக அவுரங்காபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #MarathaProtest #MarathaKrantiMorcha #MarathaReservation 
    ×